வள்ளல் பெருமான் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் – 11
பெருமானார் தம் திவ்ய தேகம் பத்தி கிருபானந்த வாரியார் சுவாமிகள் :
“வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒரு நாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் பாலசுப்ரமணிய
சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச்
சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர்
நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி
சிவாச்சார்யரின் பேரன்.
அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன். ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப்
பார்த்திருக்கிறீர்களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத்துடன், ‘அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, ‘குட்டிப் பெண்ணே… குட்டிப்பெண்ணே’ என்று கூப்பிட்டுக்
கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது
திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும்.
அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது,
மின்னலைப் போன்ற அருள்-ஞான ஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத்
துணியை இழுத்து மறைத்துக்கொள்வார்’ என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன்”.
இவ்வாறு வள்ளலாரின் உடம்பு பொன்னுடம்பு என்பதனை வாரியார் சுவாமிகளும் பதிவு செய்துள்ளார்கள்.
பகிர்வு