வைகுண்ட ஏகாதசி – சன்மார்க்க விளக்கம்

வைகுண்ட ஏகாதசி – சன்மார்க்க விளக்கம்

இந்தப் பண்டிகை வைணவர்களால் வெகு விமரிசையாகக் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது

இந்த நாளில், நாம் அனைவரும் இரவில் தூங்காமல் விழித்திருந்து , ” பரமபத ஆட்டம் ” ( ஏணியும் பாம்பும் உள்ள ) ஆட வேண்டும் என்றும், அதிகாலையில் கோவிலுக்கு சென்று, பெருமாளை வழிபட வேண்டும் என்றும் கூறுவர்

எதற்காக இந்த விளையாட்டு – ஏனிந்த சம்பிரதாயம் ??

இதில் பெரிய அர்த்தம் பொதிந்திருக்கின்றது

ஏகாதசி என்றால் – அமாவாசையிலிருந்து 11 வது நாள் என்று பொருள்
ஏகம் – ஒன்று
தசி – பத்து
ஏகாதசி – பத்து + ஒன்று = பதினொன்று 11

துவாதசி – பனிரெண்டாவது -12 வது – துவாதசாந்த நிலை – ஆன்மாவின் இருப்பு நிலை

ஏகாதச நிலையில் , தங்கத்தாலான கதவு ஒன்று நம் கீழ் உலகத்தையும் – மேல் உலகத்தையும் பிரிக்கின்றது
கீழ் உலகம் = பணம் – பதவி – அதிகாரம் – செல்வம் – ஆசை – காமம் – குரோதம் என்று இதர வகையறாக்கள்

மேல் உலகம் = அமைதி – சாந்தம் – அறிவு – ஒழுக்கம் என்று இதர வகையறாக்கள்

நாம் , நம் சாதனைகள் மூலம். , ஏகாதச நிலை அடைந்து , திருவடியின் சகாயத்தினால், கதவை திறந்து , உள்புகுந்து துவாதசாந்தத்திலுள்ள ஆன்மாவை ( பெருமாள் ) தரிசனம் செய்ய வேண்டும் என்பதே இந்தப் பண்டிகை – கொண்டாட்டத்தின் நோக்கம் , இலட்சியமும் கூட.

சாதனையில் ” விழிப்பு” நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் – நாம் இரவில் விழித்து இருக்க வேண்டும் என்பதாக நம் முன்னோர் வைத்துள்ளனர்

தாயம் வைத்து பரமபத விளையாட்டு என்பது = இந்த உலக வாழ்வே ஒரு மாய விளையாட்டு என்பதாகவும்
ஏணி மீது ஏறுதல் – நல் வினைகள் என்பதாகவும்
பாம்பு கடித்தல் – தீய வினைகள் என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டும்

அந்த கட்டங்களைத் தாண்டிச் சென்று பரமபதம் அடைதல் என்பது – இந்த மாய உலக வாழ்வில் இருந்து விடுபட்டு , ஆன்ம நிலை அடைதல் என்பதாகும் – இதுவே அதன் உண்மைப் பொருளாகும்

அகத்திலே ஆற்ற வேண்டிய இந்த மாபெரும் செயலை – நினைவுபடுத்தவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது

நாம் தும்மும் போது ‘ ஹரே ராம – ஹரே கிருஷ்ணா ” என்று பகவான் நாமத்தை சொல்கின்றோம் – ஏன் தெரியுமா ??

தும்மும் போது அந்த தங்கக் கதவு சிறிது நேரம் திறக்கிறது – அதனால் உள்ளிருக்கும் ஆன்மாவின் பெயரை உச்சரிக்கச் சொல்லியிருக்கின்றனர்.

கிறிஸ்தவர்களின் புனித நூலான ” பைபிள் – தும்மும் போது கடவுள் பெயரை உச்சரி ” என்று கட்டளை இடுகின்றது

உலக சமயங்களிடையே எவ்வளவு ஒற்றுமை ???

நாம் தான் வேற்றுமை பாராட்டி , உடலையும் மனத்தையும் பாழாக்கிகொள்கின்றோம்

ஜீவனானது மாயை கன்மம் கூடிய உலக வாழ்விலிருந்து மீண்டு – ஆன்ம நிலை ( பரம பதம் ) அடைவது தான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் பண்டிகை தான் வைகுண்ட ஏகாதசி

வெங்கடேஷ்

Leave a comment